ஐதராபாத்: தெலங்கானா மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவி செயற்பொறியாளர் மற்றும் கோட்ட கணக்கு அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் நடந்தது. இதில் கேள்வித்தாள் கசிந்தது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் சாட்ஜிபிடி மூலமாக மோசடி நடந்தது கண்டறியப்பட்டுள்ளது.பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள தெலங்கானா மாநில வடக்கு மின் பகிர்மான நிறுவனத்தில் கோட்ட பொறியாளராக பணியாற்றிய பூலா ரமேஷ் இந்த மோசடியை அரங்கேற்றி உள்ளார்.
தேர்வு மையத்தின் உயர் அதிகாரி உதவியுடன் தேர்வு தொடங்கிய 10 நிமிடத்தில் கேள்வித்தாளின் புகைப்படத்தை அவர் பெற்றுள்ளார். அதில் இருந்த கேள்விகளுக்கு சாட்ஜிபிடி மூலம் நிகழ்நேரத்தில் விடைகளை கண்டறிந்து, அவற்றை தேர்வறையில் இருந்த 7 மாணவர்களுக்கு தெரிவித்துள்ளார். விடைகளை அறிய அந்த மாணவர்கள் இயர்பட் பயன்படுத்தி ப்ளூடூத் மூலம் ரமேஷ் உடன் இணைந்திருந்தனர்.இதற்காக சம்மந்தப்பட்ட தேர்வர்களிடம் தலா ரூ.40 லட்சம் பணம் பெற்று இந்த நூதன மோசடியை ரமேஷ் நடத்தி உள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.