நாமக்கல்: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக இருப்பதாக ஒன்றிய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார். ஒன்றிய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் நேற்று நாமக்கல் வந்தார். பின்னர், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து, நாமக்கல் -மோகனூர் ரோட்டில் உள்ள இலவச நீட் தேர்வு பயிற்சி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவ -மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக இருக்கிறது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியைப் பிடிக்கும். தமிழக அரசு தொடர்ந்து ஒன்றிய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால். தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஒன்றிய அரசுடன் இணக்கமாக உள்ள மத்திய பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து மாணவ- மாணவிகளுக்கு தவறான தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்கள் நீட் தேர்வினை நல்ல முறையில் எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.