நெல்லை: அம்பை சரக காவல் நிலையத்தில் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் ஏஎஸ்பி, இன்ஸ்பெக்டர் மற்றும் இரு ஏட்டுக்கள் மீது மேலும் ஒரு வழக்கை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டம், அம்பை போலீஸ் சப்-டிவிசனுக்குட்பட்ட காவல் நிலையங்களில் பல்வேறு புகார்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர்சிங், போலீஸ் ஏட்டுக்கள் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, இன்ஸ்பெக்டர் உலகராணி சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில், ஜமீன்சிங்கம்பட்டியைச் சேர்ந்த சூர்யா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சஸ்பெண்ட் ஆன ஏஎஸ்பி பல்வீர்சிங் மற்றும் கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டராக இருந்த ராஜகுமாரி, ஏட்டுக்கள் ராமலிங்கம், ஜோசப் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலகராணி மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளார். இதையடுத்து ஏஎஸ்பி பல்வீர்சிங் மீதான வழக்குகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.