பொன்னேரி: நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பொன்னேரியைச் சேர்ந்த வாலிபர் பழவேற்காடு கடலில் மூழ்கி பலியானார். பொன்னேரி அடுத்த ஆம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (19). இவர், பொன்னேரி அடுத்த தச்சூர் கூட்டு சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் நண்பர்களுடன் பழவேற்காடு கடலில் பிரேம்குமார் குளிக்க வந்துள்ளார். கடலின் ஆழமான பகுதியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கிய பிரேம்குமார், அலையில் இழுத்துச் செல்லப்பட்டார்.
அப்போது உடன் இருந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் அவர்களால் முடியாமல் போனது. இந்த சம்பம் குறித்து திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதில் வெகு நேரம் கழித்து இறந்த நிலையில் பிரேம்குமார் மீட்கப்பட்டார். பின்னர், பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.