பெரம்பூர்: ஜீவனாம்சம் தருவதாக கூறி கணவர் ஏமாற்றியதால் பினாயில் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளம்பெண் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெரம்பூர் ஹைதர் கார்டன் 2வது தெருவை சேர்ந்தவர் எஸ்தர் (25). இவருக்கு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த பாபு என்பவருடன் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு ஷாம் (5), ஜோஸ்வா (2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து, கடந்த 6 மாதங்களாக தனது தாய் சசிகலா, தம்பி சஞ்சய் ஆகியோருடன் எஸ்தர் வசித்து வருகிறார்.
மகன்கள் இருவரையும் எஸ்தர்தான் பராமரித்து வருகிறார். இந்நிலையில் எஸ்தருக்கு தெரியாமல் வியாசர்பாடி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா என்பவரை பாபு 2வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு இந்த விவரம் எஸ்தருக்கு தெரிய வந்துள்ளது. கடந்த 7ம் தேதி எஸ்தர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அப்போது எஸ்தருக்கு ரூ5 லட்சம் ஜீவனாம்சம் தருவதாகக் கூறி காவல் நிலையத்தில் பாபு எழுதி கொடுத்துச் சென்றுள்ளார்.
2 மகன்களின் எதிர்காலம் கருதி எஸ்தரும் அதற்கு சம்மதம் தெரிவித்து எழுதி கொடுத்துள்ளார். அதன் பிறகு பாபு பணம் தரவில்லை. மேலும் இதுகுறித்து எஸ்தர் புளியந்தோப்பு அனைத்து காவல் நிலையத்தை மீண்டும் அணுகியபோது, அவர்களும் முறையான விசாரணை நடத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த எஸ்தர் நேற்று காலை மணிக்கு வீட்டில் யாரும் இல்லாதபோது பினாயிலை எடுத்து குடித்து, தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெளியே சென்றிருந்த அவரது தம்பி சஞ்சய், 2 மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது எஸ்தர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் எஸ்தர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக சென்னை பெருநகர 18வது நீதிமன்ற நடுவர் சுப்பிரமணி நேற்று முன்தினம் இரவு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால் எஸ்தர் மிகவும் கவலைக்கிடமாக மயங்கிய நிலையில் இருப்பதால் அவரிடம் வாக்கு மூலம் பெற முடியாமல் அவர் திரும்பிச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து தொடர்ந்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் மனைவிக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்ட வழக்கை காவல்நிலையத்தில் வைத்து முறையாக விசாரிக்காததே எஸ்தர் தற்கொலை முயற்சிக்கு காரணம் என எஸ்தரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.