உத்தராகண்ட்: கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டரில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அவசர அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், குப்த்காஷியில் இன்று 5 பயணிகளுடன் புறப்பட்ட தனியார் ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானி சரியான நேரத்தில் சிக்கலைக் கண்டறிந்து அருகிலுள்ள சாலையில் அவசரமாக தரையிறக்கினார்.விமானத்தில் இருந்த ஐந்து பயணிகளும் காயமின்றி தப்பினர். அதேநேரத்தில் விமானிக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் சேதமடைந்தது. இருப்பினும், பைலட்டின் சாதுர்யத்தால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தரையிறக்கிய போது சாலையில் பார்க் செய்யப்பட்டிருந்த கார் மீது ஹெலிகாப்டரின் வால் பகுதி உரசி சேதமடைந்தது. உள்ளூர் நிர்வாகம், சம்பவ இடத்திற்கு ஒரு குழுவை அனுப்பி, ஹெலிகாப்டரை சாலையில் இருந்து அகற்றி, போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்தது. இருப்பினும் சாலையில் திடீரென ஹெலிகாப்டர் இறங்கிய வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.