Saturday, December 9, 2023
Home » பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

by Lakshmipathi

*சித்தூர் டிஆர்ஓ அலுவலகம் முன்பு நடந்தது

சித்தூர் : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஆசிரியர்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். சித்தூர் மாவட்டம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சித்தூர் மாவட்ட யூடிஎப் அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் ரமணா தலைமை தாங்கி, பேசியதாவது; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வேன் என அரசு ஆசிரியர்களுக்கு முதல்வர் ஜெகன்மோகன் வாக்குறுதி அளித்தார்.

ஆனால் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றாமல் புதியதாக ஜிபிஎஸ் கேரன்டி பென்ஷன் சிஸ்டம் எனும் திட்டத்தை அறிவித்தார். இதனால் அரசு ஆசிரியர்கள் யாரும் பயனடைய மாட்டார்கள். அரசு ஆசிரியர்களின் சம்பளத்திலிருந்து 50 சதவிகிதம் பிடித்தல் செய்து அதை ஓய்வு பெற்ற பிறகு வழங்குவதாக இந்த ஜிபிஎஸ் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தால் அரசு ஆசிரியர்கள் யாரும் பயனடைய மாட்டார்கள். அவர்கள் நஷ்டத்தையே எதிர்கொள்ள நேரிடும். ஆகவே முதல்வர் கொடுத்த வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை மற்றும் புதியதாக அறிவித்த கேரண்டி பென்ஷன் திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் மாநிலம் முழுவதும் யூடிஎப் சங்கம் சார்பில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

அதேபோல் ஆசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள இரண்டு மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது இருபதாம் தேதி என்றாலும் 25ஆம் தேதி என்றாலும் சம்பளம் வழங்கப்படுவதில்லை. இதனால் ஆசிரியர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.
ஏராளமான ஆசிரியர்கள் வீடு கட்ட பிள்ளைகளுக்கு கல்வி கடன் உடல் நலத்திற்கு சுகாதாரக் கடன் உள்ளிட்டவை பெற்றுக் கொண்டுள்ளார்கள். அவர்கள் உரிய நேரத்தில் வங்கியில் பணம் செலுத்தவில்லை என்றால் அவர்களுக்கு பெனால்டி விதித்து அபராதம் வசூல் செய்கிறார்கள். இதனால் அரசு ஆசிரியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

ஆகவே 1ம் தேதி என்றால் உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள 2 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், அரசு ஆசிரியர்கள் விரும்பும் ஊர்களுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும், உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகளை உடனடியாக மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் ஆந்திர மாநிலம் முழுவதும் யூடிஎப் ஊழியர்கள் சங்கம் சார்பில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார். இதில் ஏராளமான யூடிஎப் அரசு ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு ஒரு நாள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?