Friday, July 11, 2025
Home செய்திகள்Showinpage காதல் விவகாரத்தில் பயங்கரம்; ஆசிரியை கழுத்தறுத்து கொலை: தந்தை போலீசில் சரண்

காதல் விவகாரத்தில் பயங்கரம்; ஆசிரியை கழுத்தறுத்து கொலை: தந்தை போலீசில் சரண்

by Neethimaan

காட்டுமன்னார்கோவில்: காதல் விவகாரத்தில் பள்ளி ஆசிரியையை அவரது தந்தை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு போலீசில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மணலூர் ஊராட்சிக்கு உட்பட்ட டி.மடப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூனன்(57), கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும், இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் அபிதா(27) காட்டுமன்னார்கோவிலில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக பெற்றோர் வரன் பார்த்து வந்துள்ளனர்.

இதற்கிடையே அபிதா வேறு ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு அபிதாவின் தந்தை அர்ஜூனன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அபிதா அந்த இளைஞருடன் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. தந்தை பார்க்கும் வரன்களுக்கும் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாருமில்லாத நிலையில் அபிதாவிடம் காதல் விவகாரம் குறித்து அர்ஜூனன் கேட்டு கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அர்ஜூனன் தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் மகள் அபிதாவின் கழுத்தை கொடூரமாக அறுத்துள்ளார். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, அர்ஜூனன் அருகில் இருந்த பாத்திரத்தில் கையை கழுவிவிட்டு அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தி உள்ளார். மதுபோதை அதிகமான நிலையில் அருகே உள்ள புத்தூர் காவல் நிலையத்துக்கு சென்று தனது மகளை கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி விஜிகுமார், காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் கொலை நடந்த வீட்டில் விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அர்ஜூனன் காவல்நிலையத்தில் சரணடையும்போது மதுபோதையில் இருந்ததால் அவரை காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்று காலை அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். காதல் விவகாரத்தில் தந்தையே மகளை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு போலீசில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi