பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் ஞானசௌந்தரி(92). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது மகன்கள் மற்றும் மகள்கள் வெளியூரில் வசித்து வரும் நிலையில், பரமக்குடியில் ஞானசௌந்தரி மட்டும் தனியாக வசித்து வந்தார். இவரது, வீட்டில் இலங்கை அகதியான கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த அன்னலட்சுமி பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் ஞானசௌந்தரி படுக்கையில் இறந்து கிடந்தார்.
தகவலறிந்து பரமக்குடி டவுன் போலீசார் வந்து வீட்டில் ஆய்வு செய்தனர். இதில் மூதாட்டி அணிந்திருந்த செயின், தோடு என ஏழரை சவரன் நகை மாயமாகியது தெரியவந்தது. இதுகுறித்து பணிப்பெண் அன்னலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் நகைக்காக மூதாட்டியை தலையணையால் அமுக்கி கொலை செய்ததாகவும், நகைகளை மகன் பிரபுவிடம் கொடுத்து கரூருக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அன்னலட்சுமி மற்றும் அவரது மகன் பிரபுவை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து நான்கரை சவரன் நகைகள் மீட்கப்பட்டது.