சென்னை: பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னையில் எம்ஆர்சி நகரில் உள்ள அலுவலகத்தில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு ‘புரவங்கரா பிராவிடன்ட்’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் சென்னை, மும்பை, புனே என பல்வேறு நகரங்களில் பெரிய அளவில் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை, நிலம் விற்பனை நடந்து வருகிறது.
இந்நிலையில் புரவங்கரா பிராவிடன்ட் ரியல் எஸ்டேட் நிறுவனம், குடியிருப்பு கட்டிடம் விற்பனை செய்ததில் பல கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று புரவங்கரா நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். குறிப்பாக, சென்னை எம்ஆர்சி நகர் பீச் இரண்டாவது தெருவில் உள்ள புரவங்கரா பிராவிடன்ட் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் சோதனை நடந்தது. அதேபோல், தலைமை அலுவலகம் அமைந்துள்ள பெங்களூரு, புனே, மும்பை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் உள்ள அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடந்தது.
இந்த சோதனையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்ததில் இரண்டு விதமான கணக்குகள் பராமரித்து வந்ததற்கான ஆவணங்கள், பினாமி பெயர்களில் தொடங்கப்பட்ட துணை நிறுவனங்களின் பல கோடி ரூபாய் முதலீடு செய்த ஆவணங்கள், பல கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் கிளைகள் இருப்பதால் சோதனை 2வது நாளாக இன்றும் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை அலுவலகத்தில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த சோதனை முடிந்த பிறகு தான் எத்தனை கோடி ரூபாய் புரவங்கரா ரியல் எஸ்டேட் நிறுவனம் மோசடி செய்துள்ளது என்று தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் கிளைகள் இருப்பதால் சோதனை 2வது நாளாக இன்றும் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.