சென்னை: பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததாக பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் எம்ஆர்சி நகரில் உள்ள அலுவலகத்தில் நடந்து வருகிறது. கர்நாடகா மாநிலம் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு புரவங்கரா என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் சென்னை, மும்பை, புனே என பல்வேறு நகரங்களில் பெரிய அளவில் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை, நிலம் விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் புரவங்கரா ரியல் எஸ்டேட் நிறுவனம் பல கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் புரவங்கரா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை எம்ஆர்சி நகர் பீச் இரண்டாவது தெருவில் உள்ள புரவங்கரா நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை நடந்து வருகிறது. அதேபோல், தலைமை அலுவலகம் அமைந்துள்ள பெங்களூரு, புனே, மும்பை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் உள்ள அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது.
இந்த சோதனையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்ததில் இரண்டு விதமான கணக்குகள் பராமரித்து வந்ததற்கான ஆவணங்கள், பினாமி பெயர்களில் தொடங்கப்பட்ட துணை நிறுவனங்களின் ஆவணங்கள், பல கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு நாடுமுழுவதும் கிளைகள் இருப்பதால் சோதனை நாளையும் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை முடிந்த பிறகு தான் எத்தனை கோடி ரூபாய் புரவங்கரா ரியல் எஸ்டேட் நிறுவனம் மோசடி செய்துள்ளது என்று தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.