அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 242 பேருடன் மருத்துவ கல்லூரி விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். விமானம் விழுந்ததில் விடுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள சிலரும் உயிரிழந்தனர். இந்நிலையில், விமான விபத்துக்கு டாடா குழும தலைவர் என். சந்திரசேகரன் ‘மன்னிப்பு’ கோரியுள்ளார்.
அவர், செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின்போது,
‘விமான விபத்துபற்றி கேள்விப்பட்டதும் அதிர்ந்துவிட்டேன். அதை புரிந்துகொள்ளவே எனக்கு சில நிமிடங்கள் ஆனது. விமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைக்க வேண்டும் என வேண்டி கொண்டேன். ‘கடவுளே என்ன இது?’ எப்படியாவது அனைவரும் பிழைத்துவிட வேண்டும் என்பதுதான் எனது எண்ணமாக இருந்தது. அதன்பிறகு என்னை தேற்றி கொண்டு உடனடியாக விமான நிலையம் புறப்பட்டு விட்டேன். விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல கூட வார்த்தைகள் இல்லாத மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறேன். டாடா நடத்தும் விமான நிறுவனத்தில் இந்த விபத்து நடந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம்’ என்றார்.