Saturday, December 2, 2023
Home » தமிழ்நாட்டில் வாகன வரி உயர்வு அமல்: அரசிதழில் வெளியீடு

தமிழ்நாட்டில் வாகன வரி உயர்வு அமல்: அரசிதழில் வெளியீடு

by Karthik Yash

சென்னை: தமிழகத்தில் வாகனங்களுக்கான உயர்த்தப்பட்ட வரி உயர்வு அமலுக்கு வந்தது. இது, அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த அக்.11ம்தேதி நடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில், அனைத்து வாகனங்களுக்கும் வரிகளை உயர்த்துவது தொடர்பான சட்ட திருத்த மசோதாவை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தாக்கல் செய்தார். இந்த மசோதா, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, திருத்த மசோதா சட்டமாக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. வாகனங்களுக்கான புதிய வரி உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

அதன்படி, சரக்கு வாகனங்களில் சரக்கு ஏற்றிய பிறகு 3 ஆயிரம் கிலோ கொண்ட வாகனங்களுக்கு ஆண்டு வரியாக ரூ.3,600மும், 3 ஆயிரம் கிலோ, 5,500 கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு காலாண்டு வரியாக ரூ.1,425 – ரூ.3,100 தொகை எடைக்கு ஏற்பவும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. வாடகை மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில் சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கான காலாண்டு வரி ரூ.4,900; 35 பேருக்கு அதிகமாக பயணிக்கும் வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரம்; படுக்கையுடன் கூடிய ஆம்னி பஸ்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையும், டிரைலர் போன்ற வாகனங்களில் ஏற்றப்படும் எடையின் கொள்ளளவுக்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.1,800 வரையும் வரி உயர்த்தப்படுகிறது.

சென்னை மற்றும் மதுரை, கோவை நகர சுற்றுப் பகுதிகளில் பிரத்யேகமாக இயக்க அனுமதிக்கப்பட்ட பேருந்துகளுக்கு மேல்வரி விதிக்கப்படுகிறது. எடை ஏற்றப்பட்ட நிலையில் 600 கிலோவுக்கு மிகாத, 50 சி.சி உள்ள வாகனங்களுக்கு ஆண்டு வரி ரூ.135 முதல் ரூ.240 வரை அவற்றின் சி.சி.க்கு ஏற்ப விதிக்கப்படுகிறது. பயணிகள் போக்குவரத்து மற்றும் வாடகைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு (ஓட்டுனர் உள்பட 4 பேர் பயணிக்கும் வாகனங்கள்) 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6 ஆயிரம் வரை பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உயர்த்தப்படுகிறது.

கட்டுமான தளவாட வாகனங்களுக்கு ஆண்டு வரியாக ரூ.15 ஆயிரம், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் போக்குவரத்திற்கான கல்வி நிறுவன பஸ்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.45, பணியாளர்களின் போக்குவரத்திற்கான பிற நிறுவனங்களின் வாகனங்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.100 என்ற வீதத்தில் வரி நிர்ணயம் செய்யப்படுகிறது. புதிய மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி, வாகனத்தின் விலை ரூ.1 லட்சத்திற்கு மிகாத நிலையில் அதன் விலையில் 10 சதவீதம், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் என்றால் 12 சதவீதம் என நிர்ணயிக்கப்படுகிறது.

பழைய மோட்டார் சைக்கிள்களில் ஒரு ஆண்டு பழையவற்றுக்கு 8.25 சதவீதம் மற்றும் ரூ.1 லட்சத்திற்கு மேற்பட்டவற்றுக்கு 10.25 சதவீதம், 1 ஆண்டு முதல் 2 ஆண்டு பழையதாக உள்ளதற்கு (ரூ.1 லட்சத்திற்கு உட்பட்டது) 8 சதவீதம், ரூ.1 லட்சத்திற்கும் மேற்பட்டதற்கு 10 சதவீதம் என வாழ்நாள் வரி நிர்ணயம் செய்யப்படுகிறது. 2 முதல் 11 ஆண்டுக்கு மேலாக ஓடும் மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி 6 சதவீதத்தில் இருந்து 9.75 சதவீதம் வரை (விலைக்கு ஏற்ப) நிர்ணயிக்கப்படுகிறது. புதிய மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி, ரூ.5 லட்சத்திற்கு மிகாத நிலையில் அதன் விலையில் 12 சதவீதம், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை என்றால் 13 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை என்றால் 18 சதவீதம், ரூ.20 லட்சத்திற்கு மேற்பட்டவற்றுக்கு 20 சதவீதம் என நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த 4 வகையிலான விலைகளிலுள்ள வாகனங்களில் ஒரு ஆண்டு முதல் 11 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி, அதன் விலையில் 8 சதவீதம் முதல் 18.75 சதவீதமும், 15 ஆண்டுகள் நிறைவடையாத மோட்டார் சைக்கிள்களுக்கு 5 ஆண்டுகளுக்கான பசுமை வரி ரூ.750, மற்ற மோட்டார் வாகனங்களுக்கு ரூ.1,500 எனவும், புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி, மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.375, இலகுரக வாகனங்களுக்கு ரூ.2,250, மற்ற வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரம் எனவும் நிர்ணயிக்கப்படுகிறது.

இதில் ஓட்டுநர் சேர்த்து 7 முதல் 13 பேர் வரை ஏற்றக் கூடிய புதிய சுற்றுலா வாடகை சீருந்துகளுக்கான வாழ்நாள் வரி, அதன் விலையில் 12 சதவீதம் (ரூ.5 லட்சத்துக்கு உட்பட்டவை) 13 சதவீதம் (ரூ.5 லட்சம் – ரூ.10 லட்சத்துக்கு உட்பட்டவை) 18 சதவீதம் (ரூ.10 லட்சம் – ரூ.20 லட்சத்துக்கு உட்பட்டவை), 20 சதவீதம் (ரூ.20 லட்சத்துக்கும் மேற்பட்டவை) என நிர்ணயிக்கப்படுகிறது. அரசின் கொள்கைப்படி பேட்டரி வாகனங்களுக்கு வரி கிடையாது. சென்னை மற்றும் மதுரை, கோவை நகர சுற்றுப் பகுதிகளில் பிரத்யேகமாக இயக்க அனுமதிக்கப்பட்ட பேருந்துகளுக்கு மேல்வரி விதிக்கப்படுகிறது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?