Friday, June 13, 2025
Home செய்திகள் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் காலி புட்டிகளை திரும்பப் பெறும் திட்டம் அக்டோபருக்குள் செயல்படுத்தப்படும்: அமைச்சர் முத்துசாமி தகவல்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் காலி புட்டிகளை திரும்பப் பெறும் திட்டம் அக்டோபருக்குள் செயல்படுத்தப்படும்: அமைச்சர் முத்துசாமி தகவல்

by Karthik Yash

சென்னை: மதுவிலக்கு, ஆயத்தீர்வு மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறுவது சம்பந்தமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் நடவடிக்கையாக மதுபான உற்பத்தி நிறுவனங்களை அழைத்து காலி புட்டிகளை அவர்களே சேகரம் செய்ய வேண்டுமென்ற பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மதுபான உற்பத்தியாளர்களும் காலி புட்டிகளை திரும்ப பெறுவது குறித்து இசைவு தெரிவிக்க சிறிது கால அவகாசம் கேட்டுள்ளனர்.

சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு காலி புட்டிகளை திரும்பப் பெறும் திட்டம் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் திமுக ஆட்சியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலுடன் வருகிற அக்டோபர் மாதத்திற்குள் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக செயல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும். காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவதை பற்றி 10 ஆண்டு காலம் கவலைப்படாமல் இருந்துவிட்டு தற்போது எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி, இப்படிப்பட்ட ஒரு அறிக்கை விடுவது எந்த வகையில் ஏற்புடையது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* கூடுதல் விலைக்கு முற்றுப்புள்ளி
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பதாக எடப்பாடி குற்றச்சாட்டு கூறியுள்ளார். கடந்த கால அதிமுக ஆட்சியில் இருந்து தொடர்ச்சியாக இருந்துவந்த அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு பணியாளர் அந்த தவறை செய்வதற்கு என்ன காரணம் என்பதை ஆய்வு செய்தபோது டேமேஜ் ஆகிற பாட்டில்களுக்கு போதிய நஷ்டஈடு கிடைப்பதில்லை. கூடுதல் கடை வாடகை மற்றும் பராமரிப்புக்கான செலவு செய்ய வேண்டியுள்ளது. மின்சார கட்டணம் கூடுதலாக கட்ட வேண்டியுள்ளது. இந்த செலவுகளை பணியாளர்களே ஏற்றுக்கொள்ளும் நிலை இருந்தது.

தற்போது அவைகளை ஆய்வு செய்து மின்சாரத்திற்கு தனி மீட்டர் பொருத்தி, உரிய கட்டணத்தை செலுத்திட டாஸ்மாக் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டேமேஜ் ஆகும் பாட்டில்களை சரியாக கணக்கிட்டு அச்செலவையும் நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிகள் மூலமாக மின்னனு கருவிகள் நிறுவப்பட்டு மின்னனு பரிவர்த்தனைகள் மூலமாக பணம் செலுத்தும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பில்லிங் இயந்திரங்கள் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாத காலத்திற்குள் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளிலும் பில்லிங் இயந்திரங்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி கூறினார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi