சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆந்திர பகுதிகளின் மேல் நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் வேகதிசை மாறுபாட்டின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முத்த மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.