சென்னை: தமிழகத்தில் ஓரு சில இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பதிவானது. அதிகபட்சமாக, நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 8 செ.மீட்டர் மழை பெய்தது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீட்டர் மழை பதிவானது.
திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீட்டர் மழை பெய்தது. இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்றும், நாளை (திங்கட்கிழமை) இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வெப்ப நிலையை பொறுத்தவரையில், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வருகிற 5-ந்தேதி வரை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பைவிட அதிகம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.