Saturday, June 14, 2025
Home செய்திகள்Showinpage தமிழ்நாட்டில் 16ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு நீலகிரி, கோவை, நெல்லைக்கு ‘ரெட் அலர்ட்’: வானிலை மையம் தகவல்

தமிழ்நாட்டில் 16ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு நீலகிரி, கோவை, நெல்லைக்கு ‘ரெட் அலர்ட்’: வானிலை மையம் தகவல்

by Karthik Yash

சென்னை: தமிழகத்தில் இடி மின்னலுடன் 16ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 15ம் தேதியில் நீலகிரி, கோவை, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் அனேக இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. குறிப்பாக திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை நேற்று பெய்தது.

இன்று வடதமிழகத்தில் அனேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை இன்று பெய்யும். 12ம் தேதியில் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 13ம் தேதியில் கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

14ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதிகன மழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள் தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் மேற்கண்ட மாவட்டங்களில் ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடப்பட்டுள்ளது. 15ம் தேதியில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று பகலில் வெயில் கொளுத்திய நிலையில் நேற்று மாலையில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை பகலில் 10 டிகிரி முதல் 102 டிகிரி வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் 14ம் தேதி வரை தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், தெற்கு வங்கக் கடல் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், ‘தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தாலும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. வரும் 16ம் தேதி வரை இந்த மழை நீடிக்கும். தென்மேற்கு பருவமழையும் படிப்படியாக தீவிரம் அடையும். 16ம் தேதிக்கு பிறகு இந்த நிகழ்வு உள்ளே நுழைந்துவிடும், அதாவது கேரளாவில் நுழைந்து மேற்குதொடர்ச்சி மலையில் மோதி, கர்நாடக பகுதிக்கு சென்றுவிடும். படிப்படியாக மழை குறையும். 20ம் தேதி வரை மிதமான வெப்பம் இருக்கும்’ என்றார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi