ஊட்டி: ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகை பூங்கா புல் மைதானம் சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. ஊட்டி அருகே பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள தமிழகம் மாளிகை பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும், தமிழ்நாடு முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் இங்குள்ள ஓய்வு மாளிகைக்கு வருகின்றனர். இதனால், இங்குள்ள பூங்கா அடிக்கடி பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பூங்காவை வழக்கம்போல், கோடை சீசன் மற்றும் இரண்டாவது சீசனுக்கு தயார் செய்வது வழக்கம்.
இந்நிலையில், இரண்டாம் சீசனுக்காக, பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாற்று நடவு பணிகளுக்காக பூங்காவை ஊழியர்கள் தயார் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தற்போது பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானம் சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் உரம் கலந்த மண் கொட்டப்பட்டு, சமன்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.