காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மருத்துவ கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் அடுத்த கீழ்அம்பி பகுதியை சேர்ந்தவர் பப்பு மகள் பிரியா (20). சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார். இவர், அதே பகுதியை சேர்ந்த கோகுல் என்பவரை, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். கோகுல் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். மேலும், குடிப்பழக்கம் உடையவர் என்றும் கூறப்படுகிறது. இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் குடித்துவிட்டு வந்த கோகுலை, பிரியா தட்டிக்கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் மனம் உடைந்த பிரியா, கோகுல் வெளியில் சென்ற பிறகு, வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு சென்ற பாலுசெட்டிசத்திரம் போலீசார், பிரியாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
