சென்னை: ஒன்றிய அரசு 15 சதவீதம் இடங்களுக்கு கலந்தாய்வு அறிவித்த அடுத்த நாளே தமிழ்நாட்டில் மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என்று என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்களே முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்கிறார்கள்.
முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்க தகுதியில்லை என்று இபிஎஸ் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார். மருத்துவ கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசையில் ராஜீவ்காந்தி மருத்துவமனை 11வது இடத்தை பிடித்துள்ளது. எந்த மாநில அரசு மருத்துவ கல்லூரியும் முதல் 11 இடங்களில் வரவில்லை என்றார். சிதம்பரம் குழந்தைகள் திருமண விவகாரத்தில் ஆளுநர் தெரியாமல் பேசிவிட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம் செய்தார்.
இந்தாண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் எவ்வித பிரச்சனையும் இருக்காது. ஒன்றிய அரசு 15% இடங்களுக்கு கலந்தாய்வு அறிவித்த அடுத்த நாளே தமிழ்நாட்டில் மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும். 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இன்று நல்ல முடிவு வரும். விரைவில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சர்களை சந்தித்து பேசவுள்ளோம் என்று கூறினார். இந்தியாவிலேயே மாநில அரசு நடத்தும் கல்லூரிகளில் சென்னை மருத்துவ கல்லூரிதான் முதலிடம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.