Tuesday, December 5, 2023
Home » தமிழ்நாடு அரசு, உண்மை கண்டறியும் குழுவை உருவாக்கினால் உங்களுக்கு என்ன பாதிப்பு? : அதிமுக தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கேள்வி

தமிழ்நாடு அரசு, உண்மை கண்டறியும் குழுவை உருவாக்கினால் உங்களுக்கு என்ன பாதிப்பு? : அதிமுக தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கேள்வி

by Porselvi
Published: Last Updated on

சென்னை : தவறான செய்திகளை கண்டறிய தமிழ்நாடு அரசு சரிபார்ப்புக் குழு அமைத்ததில் என்ன தவறு என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அனைத்து ஊடக தளங்களிலும் தமிழ்நாடு அரசு, அமைச்சகங்கள், துறைகள் தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான செய்திகளை கண்டறியும் வகையில், அரசின் சிறப்புத் திட்டமாக அமலாக்கத் துறையின் கீழ் “உண்மை சரிபார்ப்பு குழு” ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இந்த குழு அமைத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடைவிதிக்கக் கோரி, அதிமுக தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் குறித்து அவதூறு கருத்தை வெளியிட்ட கோவையைச் சேர்ந்த மருதாச்சலம் என்பவரின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, அரசியல் சாசன பதவிகளை வகிப்பவர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்களை கண்காணிப்பதற்காக, அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டுமென தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டிருந்தார். அதன் பின்னர், சமூக வலைதளங்களில் தவறான மற்றும் ஆபாச கருத்துகள் பகிரப்படுவதை தடுத்து நடவடிக்கை எடுக்க, சமூக ஊடக பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்ததை ஏற்று, கடந்த மாதம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வழக்கை முடித்து வைத்தது.ஆனால், இந்த சமூக ஊடக பிரிவு காவல்துறையின் வரம்பிற்கு உட்பட்டது அல்ல. காவல்துறையின் வரம்பிற்கு வெளியே “உண்மை சரிபார்ப்பு குழு” என தனியாக ஒன்றை அரசு அமைத்துள்ளது. இது குடிமக்களின் பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல் மட்டும் அல்லாமல், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் முயற்சி. காவல்துறையின் வரம்பிற்கு வெளியே இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்த அரசிற்கு எந்த அதிகாரமும் இல்லை. இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது,”என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் விஜயநாராயணன் ஆஜராகி,
“இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்த ஒன்றிய அரசு ஏற்கனவே விதிகள் வகுத்துள்ளது. ஆகவே தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை.,”என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “தவறான செய்திகளை கண்டறிய சரிபார்ப்புக் குழு அமைக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லையா ? இது ஒரு தணிக்கை அமைப்பு தானே? இதில் என்ன தவறு? காவல்துறைக்கு உதவத்தானே சரிபார்ப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு, உண்மை கண்டறியும் குழுவை உருவாக்கினால் உங்களுக்கு என்ன பாதிப்பு?பொய் தகவல்கள், வதந்திகள் விஷயத்தில் நேரடியாக காவல் துறை நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக, அதனை ஒரு குழு பரிசோதிப்பது நல்லதுதானே,”என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், பீகார் தொழிலாளர்கள் தொடர்பாக தமிழகத்தில் தவறான தகவல்கள் பரவியதை சுட்டிக் காட்டினார்.மேலும் அந்த குழுவில் தகுதியான நபரை தான் நியமித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒன்றிய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் அமைத்துள்ள உண்மை சரிபார்ப்பு குழுவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பை தள்ளிவைத்து இருப்பதை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், அந்த வழக்கில் தீர்ப்பின் விவரம் தெரிந்த பின்பு இந்த வழக்கை விசாரிக்கலாம் என்று தெரிவித்தனர். தொடர்ந்து இவ்வழக்கு டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?