சென்னை: தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இளநிலை பட்டப்படிப்புகளில் சேர 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேட்ட பாடப்பிரிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. தமிழ் மொழி பட்டபடிப்புக்கு தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனி தரவரிசை பட்டியலும், ஆங்கில மொழி பட்டபடிப்புக்கு ஆங்கில பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள், பிற இளநிலை பட்டபடிப்புகளுக்கு மற்ற 4 பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தனி தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதை தொடர்ந்து ஜூன் 1 முதல் 10ம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வும், ஜூன் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை 2ம் கட்ட கலந்தாய்வும் நடைபெறவுள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 22ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.