Saturday, September 23, 2023
Home » தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாதம் ஒருமுறை மாணவர்களுக்கு திறன்வழி மதிப்பீட்டு தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாதம் ஒருமுறை மாணவர்களுக்கு திறன்வழி மதிப்பீட்டு தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

by Mahaprabhu

சென்னை: தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்களது கற்றல் திறனை அறிந்துகொள்வதற்கு மாதம் ஒருமுறை திறன்வழி மதிப்பீட்டு தேர்வுகளை நடத்த வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

1. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 29.08.2023 முதல் 01.09.2023 வரை படிப்படியாக 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை (Learning Outcome / Competency Based Test) நடத்த வேண்டும்.

2. இந்த மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக https://exam.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும்.

3. இணைப்பு – 1 இல் குறிப்பிட்டுள்ளவாறு, தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒரு நாள் முன்பாக பிற்பகல் 2 மணி முதல் அடுத்த 23 மணி நேரத்துக்குள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.

4. வினாத்தாள்களைப் பதிவிறக்கும்போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

5. தேர்வு தொடங்கும் நாளுக்கு முன்னதாகவே, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அச்சுப்பொறியைப் பயன்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை வகுப்பாசிரியர்கள் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்.

6. ஒவ்வொரு கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் (Learning Outcome / Competency Based Test) தேர்வும் 40 மணித்துளிகளில் நிறைவு செய்யத்தக்க வகையில் 25 கொள்குறி வகை வினாக்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண்ணைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே அச்சடித்த வினாத்தாள்களை வழங்கி அதற்கான விடைகளை அத்தாள்களிலேயே மாணவர்களைக் குறிப்பிடச் செய்ய வேண்டும். இத்தேர்வை வகுப்பாசிரியர் அவரது பாடவேளையில் இணைப்பு-1 இல் குறிப்பிட்டுள்ள நாளன்று தவறாமல் நடத்த வேண்டும்.

7. இத்தேர்வுக்கான வினாக்கள் அந்தந்த வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்காக அந்நாள்வரை வகுப்பறையில் கற்பிக்கப்பட்ட கற்றல் விளைவுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.

8.எவ்விதக் குறுக்கீடும் இன்றி மாணவர்கள் தாங்களாகவே விடைத்தெரிவுகளை மேற்கொள்வதைத் தலைமையாசிரியர்களும் வகுப்பாசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும்.

9. மாணவர்கள் விடையளித்த வினாத்தாள்களை மீண்டும் பெற்று மதிப்பெண்ணிட்டு வகுப்பாசிரியர்கள் பராமரிக்க வேண்டும்.

10. தேர்வுக்குப் பின் வரும் கற்பித்தல் நாட்களில், இவ்வினாத்தாள்களில் இடம்பெற்றிருக்கும் வினாக்கள், வினா அமைப்பு, தேர்வுகளில் இவ்வகை வினாவை எதிர்கொள்ளும் முறை குறித்து தாங்கள் கற்பிக்கும் பாடத்தினூடாக அனைத்து ஆசிரியர்களும் தங்கள் வகுப்பறையில் மாணவர்களுடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாட வேண்டும்.

11. அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் இணைப்பு 2 இல் உள்ள வழிமுறைகளில் புலமை பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

12. ஒவ்வொரு மாதமும் ஒரு முறை என 6 முதல் 9 வகுப்பு வரை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் (Learning Outcome / Competency Based Test) நடைபெறுவதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளை செயல்படுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?