சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் தலைமையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் செயலாக்க முகமைகள் மூலம் தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் பெண்கள் கூட சுய உதவிக் குழு இயக்கத்தில் இணைந்து தொழில் முனைவோராக மாற்றம் பெற்று, பொருளாதார சுயசார்பு அடைந்து வருகின்றனர்.
இச்சிறப்புமிகு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் தட்டச்சர் மற்றும் இளநிலை உதவியாளர்களாக பணியாற்ற, முதன்முறையாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு, பணிகள் குறித்த அடிப்படை பயிற்சியினை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப. அவர்கள், இன்று (28.05.2025) சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் துவக்கி வைத்து, இப்பயிற்சிக்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள கையேடுகளை வழங்கி, பயிற்சியாளர்களை வாழ்த்தினார்.
28.05.2025 முதல் 10.06.2025 வரை நடைபெறும் இப்பயிற்சியில் அரசின் அறிவிப்புகள், அரசாணைகள், திட்டங்களை செயல்படுத்தும் முறை, பதிவேடுகள் பராமரித்தல் உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து, பல்வேறு அரசு துறைகளின் அலுவலர்கள் உரிய கையேடுகள் மூலம் பயிற்சிகள் வழங்க உள்ளனர்.இந்தப் பயிற்சியின் துவக்க நிகழ்வின் போது, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. ஸ்ரேயா பி. சிங், இ.ஆ.ப., கூடுதல் இயக்குநர்கள், பொது மேலாளர், இணை இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.