Sunday, June 22, 2025
Home செய்திகள்Showinpage தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது: முதல்நாளில் 2 சுயேச்சைகள் மனு தாக்கல்; திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாக அதிக வாய்ப்பு

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது: முதல்நாளில் 2 சுயேச்சைகள் மனு தாக்கல்; திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாக அதிக வாய்ப்பு

by Karthik Yash

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்பி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் இரண்டு சுயேட்சைகள் மனு தாக்கல் செய்தனர். இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி சார்பில் போட்டியிடும் 4 வேட்பாளர்கள் மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வாக அதிக வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் வருகிற ஜூலை 24ம் தேதியுடன் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. ,இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று (2ம் தேதி) தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

திமுக வேட்பாளர்களாக வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா, கூட்டணி சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி அதிமுக சார்பில் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு சீட் வழங்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் பிரேமலதா கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து விட்டார். அதேநேரம், தற்போது தேமுதிகவை சமாதானப்படுத்தும் வகையிலும், அதிமுக கூட்டணியில் தேமுதிகவை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தேமுதிகவுக்கு 2026ம் ஆண்டு மாநிலங்களவை எம்பி சீட் வழங்கப்படும் என்றும், தேமுதிகவுடன் கூட்டணி தொடருகிறது என்றும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் நேற்று (2ம் தேதி) முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி காலை 11 மணி முதல் மாலை 3 மணி சென்னை, தலைமை செயலகத்தில் சட்டமன்ற பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பா.சுப்பிரமணியத்திடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். வருகிற 9ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் உள்ளது. இதில் பக்ரீத் விடுமுறை நாளான ஜூன் 7ம் தேதி மற்றும் ஞாயிற்றுக்கிழமையான ஜூன் 8ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது.

மற்ற நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 10ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற உள்ளது. ஜூன் 12ம் தேதி பிற்பகல் 3வரை மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம்.
திமுக மற்றும் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குப்பதிவு தேவைப்படும் பட்சத்தில், தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற குழுக்கள் அறையில் ஜூன் 19ம் தேதி வாக்குப்பதிவு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான நேற்று இரண்டு சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதன்படி சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் கு.பத்மராஜன் மற்றும் தெலங்கானா மாநிலம், மேட்சல்-மகாஜபுரியை சேர்ந்த கண்டே சயன்னா ஆகிய 2 பேர் சுயேட்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். ரூ.10 ஆயிரம் டெபாசிட் கட்ட வேண்டும். இந்த இரண்டு பேருக்கும் எந்த எம்எல்ஏக்களும் முன்மொழியாததால் வருகிற 10ம் தேதி வேட்புமனு பரிசீலனையின் போது இவர்களின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு விடும். தற்போதுள்ள சூழ்நிலையில் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக மற்றும் கூட்டணி சார்பில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்கள் மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்பட்சத்தில், இந்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதால், 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

* ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் 249வது முறையாக மனு தாக்கல்
தமிழகத்தில், மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று சுயேச்சை வேட்பாளராக சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் கடந்த 1988ம் ஆண்டு முதல் அனைத்து தேர்தல்களிலும் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார். தற்போது 249வது முறையாக மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi