சென்னை: தமிழ்நாடு மீனவர்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்தும் பிரதமருக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை அரசிடமிருந்து விடுவித்து அவர்களை விமானம் மூலமாக இந்தியாவிற்கு அழைத்து வந்த நமது ஒன்றிய அரசின் சீரிய முயற்சிகளை மனதார வாழ்த்துகிறேன்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை 3 மாதங்களில் மீட்டு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளையும் துரிதப்படுத்திய பிரதமர் மோடி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு பாஜக சார்பாகவும், தமிழக மீனவர்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 11-ஆண்டு கால பாஜக ஆட்சியில் தொடர்ந்து தமிழக மீனவர்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மற்றுமொரு முறை எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.