சென்னை: நடப்பாண்டு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நிறைவு நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப் கடந்த மாதம் 6ம் தொடங்கியது. அதன்படி, அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக வளாக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக் கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடி இடங்களில் சேர்வதற்காக விண்ணப்பதாரர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து வந்தனர். விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள் முதலே மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பிது வந்தனர்.
இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தப்படி ஜூன் 6ம் தேதியுடன் விண்ணப்ப பதிவானது நிறைவு பெற்றிருந்தது. ஜூன் 6ம் நள்ளிரவு நிலவரப்படி 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 12 பேர் விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி இருந்தனர். இந்நிலையில் விண்ணப்ப பதிவிற்கான கால அவகாசத்தை மேலும் 2 நாட்கள் நீட்டித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை கடந்த 9ம் தேதி அன்று வெளியிட்டு இருந்தது. அதன்படி, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவானது ஜூன் 10 மற்றும் 11 ஆகிய 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து வந்தனர்.
அதன்படி, மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 பேர் விண்ணக் கட்டணத்தையும், ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 853 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஜூன் 12ம் தேதி ராண்டம் எண், ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியலும் வெளிடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து சிறப்பு இடஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அட்டவணைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.