சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று மாட்டு பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாள் என்று போற்றப்படும் பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் உலகத் தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தை பொங்கலுக்கு மறுநாளான நேற்று மாட்டு பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். உழவுத் தொழிலுக்கு உறுதுணையாய் இருக்கும் காளைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டு பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மக்கள் தங்கள் வாழ்வில் குடும்ப உறுப்பினர்களை போல் வாழும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மாட்டுப் பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகர் பகுதிகளிலும் கூட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த கலைநிகழ்ச்சியில் பல்வேறு கிராமிய விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் நேற்று ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இளைஞர்கள் உற்சாகமாக போட்டிகளில் கலந்து கொண்டு காளைகளை அடக்கி தங்களது வீரத்தை வெளிப்படுத்தினர்.


