சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை, ராமநாதபுரம், சுங்கம், சிங்காநல்லூர், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மதுரைமாவட்டம் திருப்பரங்குன்றம், திருநகர், தனக்கன்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும் கோவை மாவட்டத்தில் இடையர்பாளையம், கோவில்மேடு, டி.வி.எஸ். நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவிநாசி சாலை, ரயில் நிலையம், பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.