சென்னை: தமிழ்நாட்டில் மார்பகப் புற்றுநோய் ஆண்டுதோறும் 4 சதவீதம் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மனிதனின் வாழ்வியல் மாற்றம், உணவு பழக்கம், போதை பழக்கம், மரபணு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணத்தால் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நுரையீரல் புற்றுநோய், வாய் தொடர்பான புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் வயிறு தொடர்பாக புற்றுநோய் ஆகிய ஐந்து வகையான புற்றுநோய் நாட்டில் அதிகமாக பரவி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையிலும் 1 லட்சம் பெண்கள் பரிசோதனை மேற்கொண்டால் அதில் 25 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
10 வருடங்களுக்கு முன்னாள் 16 பெண்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அது தற்போது 25 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. 1 லட்சம் பெண்கள் பரிசோதனை மேற்கொண்டால் அதில் 37 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு மார்பக புற்று நோய் வர தொடங்கும். 60 வயதுக்கு மேல் 8ல் 1 பெண்ணுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுகிறது எனவும் கிராமப்புறத்தில் உள்ள பெண்களை விட நகரத்தில் உள்ள பெண்களுகே மார்பக புற்று நோய் அதிகம் ஏற்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
இது தொடர்பாக புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் சுரேஷ் குமார் கூறியதாவது: மார்பக புற்றுநோய் கிராமங்களை காட்டிலும் நகரத்தில் உள்ள பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கதிர்வீச்சு பாதுகாப்பு மற்றும் அளவீடுகளுக்கான தேசிய கவுன்சில் ஆய்வுப்படி தமிழகத்தில் மார்பகப் புற்றுநோய் ஆண்டுக்கு 4 சதவீதம் அதிகரித்து வருகிறது. இந்த புற்றுநோய் பொதுவாக 4 நிலை உள்ளது. முதல் நிலையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் அறுவைசிகிச்சை செய்து 100 சதவீதம் குணப்படுத்த முடியும். 2ம் நிலையில் கதிரியக்க சிகிச்சை, கீமோதெரபி மற்றும் அறுவை சிகிச்சை செய்து 40 சதவீதம் குணப்படுத்திவிடலாம்.
ஓமந்தூரார் பல்னோக்கு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய்க்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இங்கு புற்றுநோய் வாரியம் உள்ளது. பரிசோதனை செய்து புற்றுநோய் கண்டறிந்த பிறகு 10 நாட்களுக்குள் சிகிச்சை தொடங்கப்படும். ஆண்டுக்கு 2000 பெண்களுக்கு இதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலத்தில் இருந்தும் சிகிச்சைக்காக வருகை தருகின்றனர். பொதுவாக தனியார் மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு 7 முதல் 8 லட்சம் வரை செலவாகும் ஆனால் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனைத்தும் சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தடுக்கும் வழிகள்
* மார்பகத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்
* 30 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும்
* 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் வருடத்திற்கு ஒரு முறை மருத்துவமனை சென்று `மேமோகிராம்’ பரிசோதனை செய்யவேண்டும்
* உணவு பழக்கத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும்
மார்பக புற்றுநோய் அறிகுறிகள்
மார்பில் கட்டி அல்லது வீக்கம்
மார்பக தோலில் அதீத சுருக்கம்
மார்பக காம்பு சுருங்குதல்
அக்குளில் வலியில்லாத கட்டி
மார்பகத்தில் ரத்த கசிவு ஏற்படுவது
* ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய்
பெண்களுக்கு மட்டுமே மார்பக புற்றுநோய் வரும் எண்ணம் தவறானது. ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரும் ஆனால் அது 0.5 – 1 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது. குறிப்பாக குடும்பத்தில் புற்றுநோய் பாதிப்பு வரலாறு இருந்தால் இது ஏற்படும்.