சென்னை: தமிழ்நாடும் கேரளமும் நாட்டைக் காக்கின்ற முயற்சியில் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னையில் நடைபெற்ற கேரள மீடியா அகாடமியின் “மீடியா மீட் 2023” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது: என்ட பிரியப்பட்ட மலையாள சகோதரர்களுக்கு ஸ்டாலின்ட சிநேகம் நிறைஞ்ச நமஸ்காரம் என்று மலையாளத்தில் தனது பேச்சை தொடங்கினார். பின்னர் அவர் பேசும்போது, சில நாட்களுக்கு முன்பு, ஓணம் திருநாளைக் கொண்டாடிய நமது மலையாள மொழிச் சொந்தங்களுக்கு, மலையாளத்தில் என்னுடைய வாழ்த்துகளைச் சொன்னேன். இதற்கு முன்பு கேரளாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றிலும் நான் மலையாளத்தில் பேசியிருக்கிறேன். நாம் ஒரே மொழி குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அதாவது திராவிட மொழி குடும்பத்தை சார்ந்தவர்கள். சமத்துவத்திற்கு எதிராக இருக்கக்கூடியவர்களுக்கு இன்றைக்கு ‘திராவிடம்’ என்று சொல் ஒரு எரிச்சலாகவே இருக்கிறது.
கேரள அரசின் கீழ் இயங்கக்கூடிய தன்னாட்சி பெற்ற நிறுவனமாக கேரளா மீடியா அகாடமி செயல்பட்டு வருகிறது. சார்புத் தன்மை இல்லாத மதச்சார்பின்மையை போற்றுகின்ற ஊடகவியலாளர்களை உருவாக்குவதற்கு இந்த அகாடமி பங்காற்றி வருகிறது. இன்றைய நிலைமையில் இது மிகவும் தேவையான ஒன்று. ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட்டால் தான் நாட்டின் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்கும். அந்த வகையில் மிக சிறப்பான நீண்ட அனுபவம் மிக்க ஊடகவியலாளர்களால் நிர்வகிக்கப்படும் இந்த அகாடமி எதிர்காலத்திலும் அத்தகைய ஊடகவியலாளர்களை உருவாக்குவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கேரள மீடியா அகாடமி சார்பில் நடைபெறும் இந்த சிறப்பான விழாவில் பங்கெடுத்து உங்களை எல்லாம் சந்திக்கக்கூடிய வாய்ப்பை பெற்றமைக்கு நான் பெருமை அடைகிறேன். மிசாவில் கைதாகி ஓராண்டு காலம் சென்னை சிறையில் இருந்தவன் நான். எனவே அந்த உரிமையோடு இதை நான் இங்கே குறிப்பிட்டு காட்டியிருக்கிறேன்.
இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக, இந்தியாவின் பாதுகாப்பே முக்கியம் என அண்ணா திராவிடநாடு கோரிக்கையைக் கைவிட்டார். அந்நிய நாட்டால் இந்தியாவுக்கு ஆபத்து வந்த காலம் அது. வீடு இருந்தால் தான் ஓடு மாற்ற முடியும் என்று விளக்கம் அளித்து இந்த நிலைப்பாட்டை எடுத்தார் அண்ணா. இதே போன்றுதான் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு இன்று ஆபத்து வந்திருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்துக்கு ஆபத்து வந்திருக்கிறது. மதச்சார்பின்மைக்கு ஆபத்து வந்திருக்கிறது. சமூகநீதியை சிதைக்கப் பார்க்கிறார்கள். இவை அனைத்தையும் சிதைப்பதன் மூலமாக இந்தியாவை சிதைக்கப் பார்க்கிறார்கள். இதனை அரசியல் தளத்தில் அரசியல் இயக்கங்களாகிய நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்தியாவைக் காப்பாற்றும் பணியில் ஊடகங்களும் தங்களது பங்களிப்பைச் செலுத்த வேண்டும். ஆட்சிப்பொறுப்பிற்கு வந்தபிறகு ‘இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் என்னுடைய வேதம்’ என்று சொல்லி நாடாளுமன்றத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் வணங்கியவர் பிரதமர். இப்போது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே செயல்பட்டு கொண்டிருக்கிறார். இதனை நாட்டிலுள்ள அனைத்து மக்களும் உணர்ந்து இந்த போக்கை எதிர்க்க வேண்டும்.
இங்கு கூடியிருக்கும் எனது மலையாள சொந்தங்களுக்கும் கேரளத்தில் வாழக்கூடிய சொந்தங்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது, தமிழ்நாடும் கேரளமும் நாட்டைக் காக்கின்ற முயற்சியில் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும். அதேபோல் ஊடகங்களும், பொய்பரப்புரைகளுக்கும் திசை திருப்புபவர்களுக்கும் முக்கியத்துவம் தராமல் விடுதலைப் போராட்டக் காலத்தில் செயல்பட்டதைப் போல மீண்டும் செயல்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.