Monday, September 25, 2023
Home » தமிழ்நாட்டில் கடந்த 1 மாதத்தில் ரேஷன் அரிசியை கடத்திய 190 வாகனம் பறிமுதல்; 619 பேர் அதிரடி கைது

தமிழ்நாட்டில் கடந்த 1 மாதத்தில் ரேஷன் அரிசியை கடத்திய 190 வாகனம் பறிமுதல்; 619 பேர் அதிரடி கைது

by Lavanya
Published: Last Updated on

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 1 மாதத்தில் ரேஷன் அரிசியை கடத்திய 190 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 619 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர், உடந்தையாக செயல்படுவோர் மீது, இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் -1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம், 1980-ன் படி அவ்வப்போது தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 01.07.2023 முதல் 31.07.2023 வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ.49,40,516/- (ரூபாய் நாற்பத்தொன்பது லட்சத்து நாற்பதாயிரத்து ஐந்நூற்று பதினாறு மட்டும்)

மதிப்புள்ள 3610 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி, 181 எரிவாயு உருளைகள், 1161 கிலோ கோதுமை, 1710 கிலோ துவரம்பருப்பு, 2140 லிட்டர் மண்ணெண்ணெய், 36 பாக்கெட் பாமாயில் ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 190 வாகனங்களும் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன. குற்றச்செயலில் ஈடுபட்ட 619 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டம் 1980-ன்கீழ் 1 நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?