Friday, July 11, 2025
Home செய்திகள்Showinpage தமிழகத்தில் சமூகநீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பை அரசே நடத்த வேண்டும்: முதல்வரை நேரில் சந்தித்து ராமதாஸ் கடிதம்

தமிழகத்தில் சமூகநீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பை அரசே நடத்த வேண்டும்: முதல்வரை நேரில் சந்தித்து ராமதாஸ் கடிதம்

by Arun Kumar

சென்னை:தமிழகத்தில் சமூகநீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பை அரசே நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை கடிதத்தினை வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை, பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார். அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தினை வழங்கினார். இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சமூகநீதியின் தொட்டில் என போற்றப்படும் தமிழ்நாட்டில், சமூகநீதியை பாதுகாப்பதற்காக அவசரமாகவும், அவசியமாகவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தமிழ்நாட்டின் முதல்வருக்கு இந்த கடிதத்தை நான் எழுதுகிறேன். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது 83 ஆண்டு கால கோரிக்கையாகும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப்போர் காரணமாக 1941ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக நடத்தப்படாத நிலையில், அப்போதிலிருந்தே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகான கோரிக்கைகள் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 43 ஆண்டுகளாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக நான் குரல் கொடுத்து வருகிறேன். அதன்பிறகு 1989, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டது. இருப்பினும், அந்த வாய்ப்புகள் தவறவிடப்பட்டன.இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு இணையாக சமூகநீதியை பாதுகாக்கும் மாநிலங்களில் ஒன்றான பீகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் விவரங்கள் காந்தியடிகளின் பிறந்தநாளான கடந்த அக்.2ம் தேதி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவான குரல்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவான நிலையையே நீங்கள் எடுத்து வந்திருக்கிறீர்கள். அத்தகைய கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தும் என்று எண்ணி காத்திருப்பதா? தமிழ்நாடு அரசே அதன் அதிகாரத்தை பயன்படுத்தி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதா? என்பது தான் நமக்கு இடையே உள்ள மாறுபட்ட கருத்து நிலைப்பாடுகளாகும்.சமூகநீதியைக் காக்க இந்தியா முழுவதும் 2021ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த அக்டோபர் 21ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தீர்கள். தேசிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியதன் தேவை குறித்தும் அதில் குறிப்பிட்டிருந்தீர்கள். அவற்றில் மாற்றுக்கருத்துகளுக்கு இடமில்லை.

அதேபோல், தேசிய அளவில் 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவதை பாமகவும் ஆதரிக்கிறது. ஆனால், இன்றைய சூழலில் அதற்கு வாய்ப்பில்லை என்பதால், மாற்று ஏற்பாடாக மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்படி வலியுறுத்துகிறேன். நீங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதி 70 நாட்களாகி விட்ட நிலையில், அது தொடர்பாக ஒன்றிய அரசிடமிருந்து சாதகமான பதில் எதுவும் வரவில்லை. அதேநேரத்தில், பிரதமரும், ஒன்றிய உள்துறை அமைச்சரும் பல்வேறு மேடைகளில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு எதிராக பேசி வருகின்றனர். அதனால் தான், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே சொந்தமாக நடத்த வேண்டும் என பா.ம.க. வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான தேவை கடந்த காலங்களில் இருந்ததை விட இப்போது அதிகரித்திருக்கிறது. தமிழகத்தின் சமூகநீதி சிறப்புகளில் முதன்மையானது 69 சதவீதம் இட ஒதுக்கீடாகும். அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2010ம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 69 சதவீத இடஒதுக்கீடு செல்லும்; ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டின் அளவை உறுதி செய்ய வேண்டும் என ஆணையிட்டது. இருப்பினும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாததால் 69 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் விவரங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாவிட்டால், 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை காப்பாற்ற முடியாது என்பது தான் உண்மை.

பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் இடஒதுக்கீட்டின் அளவு 70 விழுக்காட்டை கடந்து விட்ட நிலையில், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக உயர்த்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டுமானால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்தொகையை சாதிவாரியாக கணக்கிட வேண்டும். அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.

எனவே, தமிழ்நாட்டின் தேவையையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் தமிழக அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும். அதற்கான கால அட்டவணையை உடனடியாக வெளியிட வேண்டும் என கோருகிறேன்.இவ்வாறு எழுதியுள்ளார். இந்தநிகழ்வின் போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பாமக சட்டமன்ற கட்சி தலைவர் ஜி.கே.மணி, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi