சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இலாக்கா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழக அமைச்சரவையில் நீர்வளத்துறை மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சராக துரைமுருகனும், சட்டத்துறை அமைச்சராக எஸ்.ரகுபதியும் இருந்து வந்தனர். இந்நிலையில், அமைச்சரவையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றத்திற்கான பரிந்துரையை ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி இருந்தார்.இதனைத் தொடர்ந்து, முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகனுக்கு கூடுதலாக சட்டத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அமைச்சர் ரகுபதிக்கு இயற்கை வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டடுள்ளது. அண்மையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக மின்சாரத்துறையும், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறையும் ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை மற்றும் காதி துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதேபோல் பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.