Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 3 மணியுடன் நிறைவடைந்தது

சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவுபெற்றது. இதனால் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒரே நேரத்தில் மனுதாக்கல் செய்ய குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை கடந்த மார்ச் 15ம் தேதி இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார். அதன்படி தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் கடந்த மார்ச் 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி (இன்று) வரை மனு தாக்கல் செய்யலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழகத்தில் திமுக, அதிமுக, தவெக, நாதக கட்சிகள் என நான்குமுனை போட்டி நிலவி உள்ளது. இதற்காக திமுக 23 கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டு அன்புமணி தரப்பு பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. வழக்கம் போல் சீமான் தனித்து களம் காண்கிறார். மேலும், தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக தனித்து போட்டியிடுகிறது.

அந்த வகையில் கடந்த மார்ச் 30ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து இதுவரை மூன்று நாட்கள் மனுதாக்கல் நடைபெற்றுள்ளது. மொத்தம் 234 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக இதுவரை 5,000 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். முதல் 3 நாட்களில் 3,430 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கடைசி நாளில் மட்டும் சுமார் 2,000 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 3 மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்று வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் என்பதால் தேர்தல் அலுவலகங்களில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, தவெக மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஒரே நேரத்தில் மனு தாக்கல் செய்ய திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 27 தொகுதிகளிலும் போட்டியிட இருக்கிறது. இரு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் அறிவித்தனர். இதனால் இறுதி நாளான இன்று காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் இன்று ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய குவிந்தனர்.

மேலும் இறுதி நாளான இன்று, அரசியல் கட்சியினர்களுடன் சேர்ந்து சுயேட்சை வேட்பாளர்களும் அதிக அளவில் மனுதாக்கல் செய்ய வந்திருந்தனர். இதனால் தேர்தல் அலுவலகங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வேட்பாளர்களுக்கு டோக்கன் வழங்கும் முறையும் பின்பற்றப்பட்டு, அந்த வரிசையில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இதையொட்டி, தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. நாளை (7ம் தேதி) தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்பு வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். தகுதியான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். 9ம் தேதி மாலை 3 மணியுடன் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் வாங்கலாம். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதுடன், சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கப்படும். இதையொட்டி, வருகிற 23ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.