ஊட்டி : ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகை பூங்கா புல் மைதானம் சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா,ரோஜா பூங்கா,படகு இல்லம்,தொட்டபெட்டா போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். விஐபி.,க்கள் மற்றும் சில சுற்றுலா பயணிகள் ஊட்டி அருகே பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள தமிழகம் மாளிகை பூங்காவிற்கு சென்று கண்டு ரசித்து செல்கின்றனர்.
மேலும், தமிழக முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் இங்குள்ள ஓய்வு மாளிகைக்கு வருகின்றனர்.இதனால், இங்குள் பூங்கா எப்போதும் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பூங்காவை வழக்கம் போல், கோடை சீசனுக்காக தயார் செய்வது வழக்கம்.
இந்நிலையில், வரும் கோடை சீசனுக்காக தற்போது பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு, பூங்காவை ஊழியர்கள் தயார் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தற்போது பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானம் சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பெரிய மைதானம் சமன்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டடு வருகிறது.