சென்னை: தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, திருச்சி, சேலம், கோவை உட்பட 25 உழவர் சந்தைகளை புனரமைக்க தமிழ்நாடு அரசு ரூ.8.75 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. கோவை, செங்கல்பட்டு, ஈரோடு, கள்ளக்குறிச்சி, மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், திருப்பூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர் ஆகிய 13 மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகள் புனரமைக்கப்படுகின்றன. இந்த உழவர் சந்தைகளை புனரமைக்க ரூ.8.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உழவர் சந்தைகள் புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதற்கு விவசாயிகள் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மின்னணு சாதனங்களை பொருத்துதல், மின்னணு எடை, வடிகால் மறுசீரமைப்பு, கூரை பழுது பார்த்தல், நடைபாதை அமைத்தல் மற்றும் சீரமைத்தல், சுவர்களில் வண்ணம் பூசுதல் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் ஜலகண்டாபுரம், அஸ்தம்பட்டி, எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி ஆகிய 5 உழவர் சந்தைகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.