தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டல குழு கூட்டத்தில், ரூ.3.64 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டல குழு கூட்டம், மண்டல குழு தலைவர் டி.காமராஜ் தலைமையில் நேற்று நடந்தது. மாநகராட்சி உதவி ஆணையர் ஷகிலா முன்னிலை வகித்தார். இதில் 4வது மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 50வது வார்டு மாமன்ற உறுப்பினர் தாம்பரம் எம்.யாக்கூப் பேசுகையில், தாம்பரம் காந்தி சாலை – முத்துரங்க முதலி சாலை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, அங்கு வேகத்தடை அமைத்து தர வேண்டும். தாம்பரம் விஏஓ அலுவலகத்தில் பொதுக்கழிப்பிடம் அமைத்து தர வேண்டும். 50வது வார்டில் உள்ள சிமென்ட் சாலைகளை, தார் சாலைகளை மாற்றியமைக்க வேண்டும்.
அனைத்து தெரு விளக்குகளையும் எல்.இ.டி விளக்காக மாற்றி அமைத்துதர வேண்டும். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆர்.ஓ வாட்டர் அமைத்துதர வேண்டும். 50வது வார்டு பகுதியில் புதிய ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதேபோல கூட்டத்தில் பூங்கா பராமரிப்பு, பொதுக் கழிவறைகள் சீரமைத்தல், குடிநீர் வினியோகம், சாலை சீரமைத்தல், கொசு தொல்லைகளுக்கு தீர்வு, கால்வாய்கள் சீரமைப்பு என பல்வேறு கோரிக்கைகளை மாமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர். இதற்கு பதிலளித்த மண்டலக்குழு தலைவர் டி.காமராஜ் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
அதனைத்தொடர்ந்து கூட்டத்தில் பொது கழிப்பிடம் மற்றும் சமுதாய கழிப்பிடங்கள் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைப்பு பணிகள், ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தி சின்டெக்ஸ் டேங்க் தொட்டி அமைப்பது, குடிநீர் குழாய் பதிப்பது, திடக்கழிவு அகற்ற பயன்படுத்தப்படும் வாகனங்கள் பழுது சரிபார்ப்பது, தெரு நாய்களை பிடித்து அறுவை சிகிச்சை செய்யும் பணி, கொசு ஒழிப்பு திட்டத்திற்கு தேவையான மருந்துகள் பெறுவது, மழைநீர் வடிகால்வாய்கள் சீரமைப்பது, பூங்காக்கள் சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.3 கோடியே 64 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.