தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டல பகுதிகளில் ரூ.2.40 கோடியில் வடிகால் பணிகள் நடந்து வருகின்றனர். பல்லாவரம் சட்டமன்ற தொகுதி, தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலத்துக்கு உட்பட்ட அஸ்தினாபுரம், ஜெயன் நகர், மாருதி நகர், ஏ.கே.நகர் பகுதிகளில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி, மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
எனவே, மேற்கண்ட பகுதிகளில் வடிகால் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பேரில், மேற்கண்ட பகுதிகளில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால், இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மழைநீர் கால்வாய்க்கு நடுவில் உள்ள மின் கம்பங்களை முழுமையாக அகற்றி, கால்வாயின் வெளியே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.