திருமலை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், மாநில ஐ.டி மற்றும் கல்வித்துறை அமைச்சருமான நாரா.லோகேஷ் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். இதுதொடர்பாக நேற்று விஜயவாடாவில் அவர் அளித்த பேட்டி: டெல்லியில் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அப்போது அவர், தனது 25 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மேலும், உன் தந்தையின் நிழலில் இருந்து வெளியே வா, கடினமாக உழை.
எதிர்காலம் இளைஞர்களுடையது, கடினமாக உழைத்து வளரவேண்டும் என தனிப்பட்ட முறையில் எனக்கு பல அறிவுரைகளை வழங்கினார். ஜெகன்மோகனை சிறையில் அடைக்கும் எண்ணம் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு இல்லை. ஆனால் அவர் நினைத்தால் வெறும் 2 நிமிடங்கள் கூட ஆகாது. அடுத்த நிமிடமே ஜெகன் சிறையில் இருப்பார். ஆனால் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மட்டுமே இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. முந்தைய ஆட்சியாளர்களை பழிவாங்குவதற்காக மக்கள் எங்களை ஆட்சியில் அமர்த்தவில்லை. இவ்வாறு கூறினார்.