Saturday, June 21, 2025
Home செய்திகள்Showinpage தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை கூட்டம் ராமதாசுக்கு துணை நின்ற வன்னியர் சங்க நிர்வாகிகள்: 62 பேரில் 55 மாவட்ட செயலாளர், தலைவர் பங்கேற்பு; அன்புமணி தொடர்ந்து புறக்கணிப்பு

தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை கூட்டம் ராமதாசுக்கு துணை நின்ற வன்னியர் சங்க நிர்வாகிகள்: 62 பேரில் 55 மாவட்ட செயலாளர், தலைவர் பங்கேற்பு; அன்புமணி தொடர்ந்து புறக்கணிப்பு

by Karthik Yash

திண்டிவனம்: திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நடந்த வடமண்டல மாவட்டங்களுக்கான வன்னியர் சங்க ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் 62 பேரில் 55 பேர் கலந்து கொண்டதால் ராமதாசுக்கு சற்று நெருக்கடி குறைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பல்வேறு அணி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பாமக மாவட்ட செயலாளர் மற்றும் தலைவர்கள் கூட்டத்தை பலர் நிராகரித்த நிலையில், மகளிர் அணி நிர்வாகிகள் 5 பேர் மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால் அன்புமணி அனைத்து நிர்வாகிகளையும் ராமதாசை சந்திக்க விடாமல் தடுத்து வருவதாகவும், கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் நேற்று தைலாபுரம் தோட்டத்தில் வன்னியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என மாநில தலைவர் பு.தா.அருள்மொழி தெரிவித்திருந்தார். ஆனால், காலை 10 மணியளவில் தோட்டத்தில் நிர்வாகிகள் யாரும் வராமல் வெறிச்சோடி காணப்பட்டது. 10.30 மணியளவில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி, மாநில செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோர் வந்தனர்.தொடர்ந்து மாவட்ட, மாநில நிர்வாகிகள் திரளானோர் வந்தனர். பின்னர் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வன்னியர் சங்கத்தில் ஒரு மாநில தலைவர், 4 மாநில செயலாளர்கள், 62 மாவட்ட செயலாளர்கள், 62 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். அதேபோல் 2 துணை செயலாளர்கள், 2 துணை தலைவர்கள், ஒரு பொருளாளர் உள்ளனர். இதில் வட மண்டலத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் 62 பேரில் 55 பேர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. மற்ற நிர்வாகிகள் 310 பேரில் 200 பேர் வரை கலந்து கொண்டனர். கூட்டத்தில் வன்னியர் சங்க செயல்பாடுகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்தும் ராமதாஸ் ஆலோசனை வழங்கினார்.

நிர்வாகிகளில் பலர் ராமதாசை கடவுள் என்றும், அவர் இடும் கட்டளைக்கு அடிபணிந்து நடப்பதாகவும் தெரிவித்து சென்றனர். இந்நிலையில் முக்கியமான ஆலோசனை கூட்டமான வன்னியர் சங்க கூட்டத்தையும் அன்புமணி புறக்கணித்துள்ளது பாமகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே ராமதாஸ் பற்றி சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சகர் பெயரில் அவதூறாக விமர்சிக்கும் சி.என்.ராமமூர்த்தியை கைது செய்ய வலியுறுத்தி, தைலாபுரத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக புதுச்சேரி மாநில இளைஞரணி செயலாளர் பாலு எச்சரித்துள்ளார்.

* மிகப்பெரிய போராட்டம்
பாமக நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: 1980ல் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளாக வன்னியர் சங்கம் சார்பில் வன்னிய மக்கள் பிரச்னைகளுக்காக பல்வேறு போராட்டங்கள் செய்திருக்கிறோம். வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்று தந்துள்ளோம். மாமல்லபுரம் மாநாட்டில் கூறியதுபோல 10.5 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை என்று சொன்னால் மிகப்பெரிய போராட்டத்தை தமிழ்நாடு சந்திக்கும். அந்த கடுமையான போராட்டத்தை நடக்காமல் செய்ய வேண்டியது அரசின் கடமை.

சங்கம் என்றால் ஒற்றுமையாக இருப்பது, ஒன்று கூடுவது, உரிமைக்காக போராடுவது. வன்னியர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசுவதற்காகவும், சங்கத்தை வலுப்படுத்துவதற்காகவும் இந்த கூட்டம் நடைபெறுகிறது. வருகின்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்காகவும் இந்த ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளோம். தற்போதைக்கு கட்சி பொறுப்புகளில் மாற்றம் ஏதுமில்லை. எப்போதும்போல கட்சியும், சங்கமும் செயல்பட்டு வருகிறது. 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் தொடர்பாக அனைவரையும் கூட்டி பேசிதான் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

* வாட்ஸ் அப்பில் தகவல்
பாமக தலைவரான அன்புமணியை செயல் தலைவராக மோதலுக்குபின் ராமதாஸ் அறிவித்தார். பாமக கட்சிப் பொறுப்பில் ராமதாசுக்கு அடுத்த நிலையில் இருந்த அன்புமணிக்கு வாட்ஸ் அப் மூலம் தான் தகவல் அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி வந்தன. வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி நேற்று அளித்த பேட்டியில், ‘அன்புமணிக்கும் வாட்ஸ்அப் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் வாட்ஸ்அப் மூலமாகதான் தகவல் அளிப்பார். பாமக கட்சிக்குள் இருக்கும் சலசலப்பு விரைவில் சீராகும். இந்த கூட்டத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதற்கான தேதியும் அறிவிக்க வாய்ப்புள்ளது’ என்றார்.

* கட்சி மகன் கையில் ; சங்கம் தந்தை கையில்
வன்னியர் சங்கத்தை தொடங்கிய பாமக நிறுவனர் ராமதாஸ், நேற்று வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியிருந்தார். வழக்கம்போல் கட்சியின் செயல் தலைவரான அன்புமணி, பாமகவின் அனைத்து பிரிவு நிர்வாகிகளையும் தன்பக்கம் நிறுத்தியதுபோல வன்னியர் சங்கத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கட்சியின் ஆணி வேராக இருக்கக் கூடிய வன்னியர் சங்கத்தையும் தன் பக்கம் இழுத்துவிட்டால் பாமகவையே முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடலாம் என அன்புமணி கருதி, பல்வேறு தடை முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிகிறது.

இதன் ஒருபகுதியாகவே அன்புமணி தைலாபுரம் தோட்டத்துக்கு (19ம்தேதி) வருவார் என்ற தகவலும் கசிய விடப்பட்டதாம். ஆனால் ராமதாஸ் எதிர்பார்த்தபடியே பெருவாரியான வன்னியர் சங்க நிர்வாகிகள் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றதால் அவர் உற்சாகமாக உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அன்புமணியை தைலாபுரம் அழைத்துவந்து சுமுக பேச்சுவார்த்தைக்கான காய்களை மூத்த நிர்வாகிகள் சிலர் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன.

* திலகபாமா ஒதுங்கல்
அன்புமணி செயல் தலைவராக அறிவிக்கப்பட்டதும் கொதித்தெழுந்து சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்ட அக்கட்சியின் மாநில பொருளாளரான திலகபாமா, எந்தவொரு கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

* அன்புமணி நீக்கமா? ஜி.கே.மணி பேட்டி
பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி நேற்று அளித்த பேட்டியில், வன்னியர் சங்கம் என்பது வன்னியர்களுக்கான அமைப்பு மட்டுமல்ல, அனைத்து ஜாதியினருக்கான அமைப்பாகும். வன்னியர் சங்கம், பாமக எந்த சமுதாயத்துக்கும் எதிரான அமைப்புகள் இல்லை. வன்னியர் சங்கம் ஆரம்பித்து அதில் சாதிக்க முடியவில்லை என்று தான் பாமகவை தொடங்கினர். தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் வெள்ளை தாளில் கையெழுத்து வாங்கியதாக பரப்பப்படும் தகவல் பொய்யானது. கையெழுத்தை வாங்கி அன்புமணியை நீக்கப் போவதாக பரப்பப்படும் தகவல் வதந்தி. பாமக நிறுவனர் ராமதாசுக்குப்பின் அன்புமணிதான் கட்சியை வழிநடத்துவார் என்றார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi