புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இளைஞர் வயிற்றில் இருந்த முழு குளிர்பான பாட்டில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. புதுக்கோட்டையை சேர்ந்த 45 வயதான ஒருவர் ஆசனவாயில் இருந்து ரத்தம் வருவதாக கடந்த 22ம்தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது வயிற்று பகுதியில் எக்ஸ்ரே எடுத்து பார்த்த டாக்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவரது வயிற்றுக்குள் கண்ணாடியிலான ஒரு முழு குளிர்பான பாட்டில் இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்து அந்த பாட்டில் வெளியே எடுக்கப்பட்டது. வயிற்றுக்குள் எப்படி பாட்டில் சென்றது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணையில், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்ட, வாய்பேச முடியாத நபர் என்பது தெரியவந்தது. இருந்தாலும் எப்படி அவ்வளவு பெரிய பாட்டில் அவர் வயிற்றுக்குள் சென்றது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போது அவர் நலமாக உள்ளார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.