Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நடத்தை சந்தேகத்தால் சித்ரவதை செய்ததாக புகார்; மின்சாரம் பாய்ச்சி, கழுத்து நெரித்து கணவர் கொடூர கொலை: மனைவி, சகோதரிகள் கைது

திருமலை: நடத்தை சந்தேகத்தால் கொடுமை செய்வதாக கூறி கணவனை மின்சாரம் பாய்ச்சி, கழுத்தை நெரித்து அவரது மனைவி கொலை செய்துள்ளார். தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் பாத்தலிங்கயபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பெய்னி சைலு(45). இவரது மனைவி கவிதா (42). இவர்களுக்கு 17 வயதில் மகளும், 14 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில் கவிதாவுக்கும், பெய்னிசைலுவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவர், குழந்தைகளை விட்டுவிட்டு கவிதா, தனது தங்கை ஜோதி, அக்கா மல்லேஷ் ஆகியோருடன் ஐதராபாத் மித்ரா ஹில்ஸ் பகுதியில் வசித்து வருகிறார். ஆனால் அடிக்கடி ஊருக்கு சென்று கணவன், குழந்தைகளுடன் 2 அல்லது 3 நாட்கள் தங்கியிருப்பாராம்.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி, உறவினரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள கவிதாவுடன் மித்ரா ஹில்ஸ்க்கு சென்றார் சைலு. தொடர்ந்து அங்கு தங்கிய சைலு, கடந்த 18ம் தேதி இரவு கவிதா, அவரது சகோதரிகள் ஜோதி, மல்லேஷ் ஆகியோருடன் கள் குடித்தார். அப்போது திடீரென சைலுவுக்கும், கவிதாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கவிதா, தனது தங்கையின் உதவியுடன், கணவரை கொல்ல மின்சார ஷாக் கொடுத்துள்ளார். மேலும் இருவரும் சேர்ந்து சைலு கழுத்தில் ஒரு துண்டை சுற்றி இறுக்கி கொலை செய்துள்ளனர். அன்று நள்ளிரவு 12 மணியளவில், கவிதா, ஒரு ஆட்டோ டிரைவரை அழைத்து, உடலை எடுத்து சென்று, பழையலிங்கயப்பள்ளி கிராமத்தின் புறநகரில் அடக்கம் செய்ய முயன்றார். உடனே ஆட்டோ டிரைவர், ‘யாருக்கும் தெரியாமல் ஏன் உடலை அடக்கம் செய்கிறீர்கள்? நான் இதற்கு ஒத்துழைக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார். அதனால் சடலத்துடன் மீண்டும் வீட்டிற்கு திரும்பினர்.

பின்னர் தனது சகோதரிகள் உதவியுடன், மித்ரா ஹில்ஸ் அருகில் ஒரு வெறிச்சோடிய இடத்தில் கணவரின் உடலை கவிதா அடக்கம் செய்தார். பின்னர் கவிதா, பாத்தலிங்கயபள்ளிக்கு சென்றார். அவரிடம் சைலு குறித்து அவரது குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கேட்டதற்கு கவிதா சரிவர பதிலளிக்கவில்லையாம்.

இந்நிலையில் சடலத்தை ஏற்றிச்சென்ற ஆட்டோ டிரைவர், கே.பி.எச்.பி. போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம், ஜோதி மற்றும் மல்லேஷிடம் விசாரணை நடத்தினர். இதில் சைலு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பாத்தலிங்கயப்பள்ளியில் உள்ள கவிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தனது நடத்தையில் சந்தேகப்பட்டு தொடர்ந்து துன்புறுத்தியதால் கணவனை கொலை செய்ததாக கவிதா கூறியுள்ளார். இதையடுத்து கவிதா, ஜோதி, மல்லேஷ் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் சைலு உடல் தோண்டி எடுக்கப்பட்டு, குகட்பள்ளி தாசில்தார் முன்னிலையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.