சென்னை: சர்வே எண் மற்றும் பட்டா விபரங்களை, மொபைல் போன் மூலம் அறிய புதிய செயலி இந்த ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் முதல்வரின் மனிதநேய விழாவாக சென்னை கிழக்கு மாவட்டம் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு முதல்வரின் 72வது பிறந்த நாளையொட்டி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” மாபெரும் உன்னதமான திட்டமானது 2025 பிப்ரவரி 20ஆம் தேதி முதல், 2026 பிப்ரவரி 19ஆம் தேதி வரை 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1000 நபர்களுக்கு மேல், வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இச்சிறப்புமிகு திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 20.2.2025 அன்று கொளத்தூரில் துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அந்த வகையில் 24ஆம் நாள் அமைச்சர் அர.சக்கரபாணி, 30வது நாள் அமைச்சர் கோவி. செழியனும், 50வது நாள் அமைச்சர் ஆர்.காந்தியும், 75வது நாள் அமைச்சர் மா.சுப்பிரமணியம், 100வது நாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களும், கலந்து கொண்டு காலை உணவு வழங்கினர். இந்நிகழ்ச்சியானது வெற்றிகரமாக தொடர்ந்து 125வது நாளான இன்று (24.6.2025), கொளத்தூர் கிழக்கு பகுதி, 68வது வார்டு, கொளத்தூர், கம்பர் நகர், வால்மீகி தெரு மற்றும் 66அ-வது வார்டு, வெற்றி நகர், பூபதி தெரு சந்திப்பு ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார்.
இச்சிறப்புமிக்க “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” திட்டத்தில் பி.கே.சேகர்பாபு தினந்தோறும் காலை 7.00 மணியளவில் கலந்து கொண்டு பசியாக வரும் பொது மக்களுக்கு, பசியாற காலை உணவு வழங்கிக் கொண்டிருக்கிறார். இச்சிறப்புமிக்க திட்டமானது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று, அப்பகுதி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு காலை உணவு அருந்திவிட்டு, முதலமைச்சரை வாழ்த்தி வருகிறார்கள். “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” மாபெரும் திட்டமானது இன்றுடன் தற்பொழுது 125 நாள் கடந்து, 2026 பிப்ரவரி 19ஆம் தேதி வரை தொடர்ச்சியாக துறைமுகம், திரு.வி.க நகர், அம்பத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் தொகுதிகள் என கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. திராவிட மாடலின் செயல்களில் ஒன்றாக இத்திட்டம் நடத்துவதில் சென்னை கிழக்கு மாவட்டம் பெருமை கொள்கிறது.
நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பசிப்பிணியை போக்கும் ஒரு அற்புதமான அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்ச்சியை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்த அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை வாழ்த்துகிறேன் என கூறினார்.
பட்டா வழங்கும் நடைமுறையை எளிமையாக்கி இருக்கிறோம் எத்தனை நபர்களுக்கு வழங்கி உள்ளோம் என்ற கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில்: 16 லட்சம் பேருக்கு பட்டா கொடுத்து இருக்கிறோம். 1962ஆம் ஆண்டு நகரத்தில் குடியிருக்கும் நபர்களுக்கு பட்டா கொடுக்க கூடாது என இருந்தது அதனை மாற்றி இன்றி நகரத்தில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்கி வருகிறோம். சென்னை மற்றும் சென்னையை சுற்றி உள்ள மக்களுக்கு பட்டா வழங்கி உள்ளோம். இது அந்த மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது என கூறினார்.
தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிப்பு ஏதாவது ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில்: இயல்பான அளவில் தான் மழை பெய்துள்ளது. பெரிய அளவில் பாதிப்பு எதும் இல்லை. நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது அதனையும் சரி செய்துள்ளோம் எனவும் மழையால் தென்மாவட்டங்களில் பெரிய பாதிப்பு இல்லை. சர்வே எண் மற்றும் பட்டா விவரங்களை பெறுவதை எளிதாக்கும் வகையில் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும். அதற்கான பணிகள் ஒவ்வொன்றாக நடைபெற்று வருகிறது. அந்த செயலியை மக்கள் பயன்படுத்தும் போது அது எளிதாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம் எனவும் எந்த அளவிற்கு மக்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் செயலி அறிமுகப்படுத்தப்படும் எனவும் சர்வே எண் மற்றும் பட்டா விபரங்களை, மொபைல் போன் வாயிலாக அறிவதற்காக வருவாய்துறை உருவாக்கி வரும் புதிய செயலி இந்த ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும் என கூறினார்.
வடகிழக்கு பருவமழைக்கான ஏற்பாடுகள் எந்த அளவில் உள்ளது என்ற கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில்: வடகிழக்கு பருவமழையை பொறுத்த வரை அனைத்து பணிகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. வருவாய் துறையில் உள்ள பேரிடர் துறையும் அதற்கான பணிகளை செய்து கொண்டு உள்ளோம், இதுவரைக்கும் எந்த மிக பெரிய பாதிப்பும் இல்லை. இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ஐசிஎப்.வ.முரளிதரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ்குமார், மண்டலக் குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் அமுதா பொன்னிவளவன், யோகபிரியா தனசேகர், தாவுத்பீ, ஸ்ரீதணி, வட்டச்செயலாளர்கள் ஆதவன் மணி, ஊமைதுரை மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.