புதுடெல்லி: நாடு முழுவதும் வரும் 15ம் தேதி நீட் முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால், ஒரே கட்டமாக தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஆகஸ்ட் 3ம் தேதி தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை முன் வந்தது. இதற்கு அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தாக்கல் செய்த மனு நீதிபதி பி.கே.மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வு முகமை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “முதுநிலை நீட் தேர்வை சுமார் 2.20 லட்சம் மருத்துவர்கள் எழுதுகின்றனர். தேர்வை ஒரே கட்டமாக நடத்த கூடுதலாக 450 தேர்வு மையங்கள் தேவைப்படுகிறது. தேர்வு மையங்களை கண்டறிய அவகாசம் வேண்டும். எனவே நீட் முதுநிலை தேர்வை வரும் ஆகஸ்ட் 3ம் தேதி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதனை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், நீட் முதுநிலை தேர்வை ஆகஸ்ட் 3ம் தேதி நடத்த அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தனர்.
நீட் முதுநிலை தேர்வை ஆகஸ்ட் 3ல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி
0