டெல்லி : கனிம வளங்களுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு மட்டுமே உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைக்கு எதிராக ஒன்றிய அரசு, கரங்க நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 8 நீதிபதிகள் மாநில உரிமைக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி உள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதி அமர்வு அளித்த தீர்ப்பில், நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.இன்று காலை தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “கனிம வளங்களுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு மட்டுமே உண்டு. மாநிலங்களில் உள்ள கனிம வளத்துக்காக ஒன்றிய அரசிடம் இருந்து பெறும் ராயல்டியை வரியாக கருதமுடியாது. ராயல்டி என்பது வரி அல்ல; குத்தகைத் தொகை மட்டுமே. கனிம ஒப்பந்த உரிமையாளர்கள் வழங்கும் ராயல்டி தொகை வரி வரம்பிற்குள் வராது.
ராயல்டியை வரி வரம்பிற்குள் கொண்டுவந்த இந்தியா சிமெண்ட்ஸ் வழக்கின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. சுரங்க நடவடிக்கைகளில் செலுத்தப்படும் ராயல்டி என்பது வரி அல்ல. ராயல்டி என்பது வரி என்ற முந்தய உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தவறானது. சுரங்கங்கள், தாது மேம்பாடு, ஒழுங்குமுறை சட்ட விதிகளில் மாநில உரிமைகளை கட்டுப்படுத்தும் பிரிவு எதுவுமில்லை. நாடாளுமன்றம் வரம்பு நிர்ணயிக்காத வரை, கனிமவள உங்களன விதிக்கும் மாநிலத்தின் உரிமை பாதிக்காது. கனிம வளங்கள் உள்ள நிலத்தின் மீது வரிவிதிக்கும் உரிமையும் மாநில அரசுகளுக்கே உள்ளது. ஒரு நிலத்தில் இருந்து கிடைக்கும் கனிம வளத்தின் அடிப்படையில் வரி விதிக்கும் உரிமையும் மாநில அரசுக்கே உள்ளது. நிலம் என்ற சொல் கனிம வளங்கள் புதைந்துள்ள அனைத்து வகை நிலங்களையும் குறிப்பிடும்,” இவ்வாறு தெரிவித்தார்.