புதுடெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் கூடுதல் இடஒதுக்கீடு அளிக்கும் ஒன்றிய அரசின் சட்டத்தை எதிர்த்து யூத்பார் ஈகூவாலிட்டி, தமிழகத்தில் தி.மு.க.வின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, ‘‘பொருளாதாரத்தின் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின்னர் திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்னிலையில் நேற்று ஒரு கோரிக்கை வைத்தார். அதில்,‘‘பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவித கூடுதல் இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற சீராய்வு மனுக்களை விசாரிக்கும் போது, திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து திமுக தரப்பில் கோரிக்கையை ஏற்பதாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டார்.