Tuesday, July 15, 2025
Home செய்திகள்Showinpage ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன் மண், மொழி, மானத்தை காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன் மண், மொழி, மானத்தை காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

by Ranjith

சென்னை: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணி செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நேற்று காணொலி காட்சி வாயிலாக நடந்தது. கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஓரணியில் தமிழ்நாடு – திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல; இது தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க எல்லோரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி. ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் இணைந்தவர்களில் விருப்பம் உள்ளவர்கள் திமுகவில் உறுப்பினர்களாகவும் இணைவார்கள்.

கீழடி உண்மைகள் புதைக்கப்படுகிறது. இந்தியை திணிக்கிறார்கள். கல்வி நிதி மறுக்கப்படுகிறது. நீட் மூலம் மாணவர்கள் பலி வாங்கப்படுகிறார்கள். தொகுதி மறுவரையறை மூலமாக நாடாளுமன்றத்தில் நம் வலிமையைக் குறைக்க சதி நடக்கிறது. பண்பாடு, பொருளாதாரம், அரசியல் என எல்லா வகையிலும் நம் மீது வன்மத்துடன் செயல்படுகிறார்கள். ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்.

நம்மை அடக்க நினைத்தால், நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமும் இதுதான். இந்த செய்தியை தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திடமும் சேர்ப்போம்; அதற்காக ஜூலை 1 தொடங்கி, 45 நாட்கள் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு நடைபெறும். அதன்படி, 4 படிநிலைகளில் செயல்பட வேண்டும்.
முதலாவது, பயிற்சி:

* திமுக தகவல் தொழில்நுட்ப அணி மூலமாக தொகுதிக்கு ஒருவர் என 234 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

* பயிற்சி பெற்ற 234 பேர் மூலமாக தொகுதிவாரியாக 68,000 வாக்குச்சாவடிகளில் உள்ள பூத் டிஜிட்டல் ஏஜென்ட்களுக்கும் அடுத்த இரண்டு நாட்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

* இப்பயிற்சிக்கான உதவிகளை மாவட்ட செயலாளர்கள் செய்து தர வேண்டும். பயிற்சியில் பூத் டிஜிட்டல் ஏஜென்ட், வாக்குச்சாவடி முகவர் ஆகியோர் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்.
இரண்டாவது, ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை தொடக்கம்:

* ஜூலை 1ம் தேதி சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் முறைப்படி நான் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை அறிவிப்பேன். அடுத்து 38 மாவட்டங்களிலும் பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் செய்தியாளர் சந்திப்பை நடத்த வேண்டும்.

* ஜூலை 2ம் தேதி 76 திமுக மாவட்டங்களிலும் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இளைஞர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்வதை இளைஞரணி உறுதி செய்ய வேண்டும்.

* ஜூலை 3ம் தேதி தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடுவீடாக சென்று மக்களை சந்திக்க வேண்டும்.அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் எல்லாரும் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் செல்ல வேண்டும். செயல்வீரர்கள் ஒருவர் விடாமல் வீட்டுக்கு வீடு சென்று பரப்புரை செய்வதை உறுதிசெய்ய வேண்டும்.
மூன்றாவது, ‘டோர் டூ டோர்’ பரப்புரை:

* ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குச்சாவடி முகவர், பூத் டிஜிட்டல் ஏஜென்ட், ஒரு பெண், ஒரு இளைஞர், பிஎல்சி உறுப்பினர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். இது கட்டாயம். இதில் யாருக்கும் விதிவிலக்கு கிடையாது. இவர்களுடன் நிர்வாகிகளும் செயல்வீரர்களும் இணைந்து கொள்ள வேண்டும்.

* நான்காவதாக, நிறைவு: ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு, தமிழ்நாடு முழுக்க ஓரணியில் தமிழ்நாடு நிறைவு விழாக்களை நடத்த வேண்டும். இந்த 4 படிநிலைகளும் சரியாக நடக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டிய முழுப்பொறுப்பு மாவட்ட செயலாளர்களுக்கும், மண்டல பொறுப்பாளர்களுக்கும், தொகுதி பார்வையாளர்களுக்கும் உரியது.

இந்த பரப்புரையில் முக்கியமான அம்சங்கள்:

* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களையும் 100 சதவீதம் சந்தித்திருக்க வேண்டும். எதிர்கட்சியினர் இல்லங்களுக்கும் நேரில் சென்று பேச வேண்டும்.

* ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான பரப்புரை மட்டும் இல்லை. இது தமிழ்நாட்டு மக்களை நம் மண், மொழி, மானம் காக்க ஒன்றிணைக்கும் ஒரு முன்னெடுப்பு.

* வாக்குச்சாவடி முகவர், பூத் டிஜிட்டல் ஏஜென்ட், ஒரு பெண், ஒரு இளைஞர், பிஎல்சி உறுப்பினர், திமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள் கொண்ட குழுவாக சேர்ந்துதான் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்ல வேண்டும். இவ்வாறு பேசினார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi