வேலூர்: கோடை மழை தொடங்கி உள்ளதால் மண்ணின் ஈரப்பதம் அதிகரிக்க உழவு செய்வது அவசியம் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. மரங்கள், செடிகள் கருகி வருகிறது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் வறண்டு கிடந்த பூமி தற்போது குளிர்ச்சியான நிலைக்கு மாறி உள்ளது. இந்த கோடை மழையை பயன்படுத்தி விவசாயிகள் உழவு செய்ய வேண்டும் என்று வேளாண்மை துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது: கோடை உழவு என்பது வெப்பமான கோடைகாலத்தில் சிறப்பு கருவிகளை பயன்படுத்தி ஆழமாக உழுதலாகும். முதற்பயிர் சாகுபடி ஆனி, ஆடி மாதத்தில் துவங்கி 2வது பயிர் தை மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது. மாசி-வைகாசி வரை நிலம் உழவின்றி தரிசாக பாதிப்புக்குள்ளாகிறது. பயிரில்லா காலத்திலும் வயலை உழுது புழுதி வயலாக மாற்ற வேண்டும். உழவின் எண்ணிக்கையும் ஆழமும் களைகளின் தீவிரத்தைப் பொறுத்தது.
15-20 நாட்கள் இடைவெளியில் பருவமழை வருவதற்கு முன் இரண்டு முறை கோடை உழவு செய்யவேண்டும். வயலை சாய்வு மற்றும் குறுக்காக உழுவதால் நிலத்தின் மேற்பரப்பில் உள்ள மண் கட்டிகள் உடைந்து மண் அரிப்பு தடுக்கப்பட்டு சத்துக்கள் இழப்பும் குறைகிறது. மழைநீர் வீணாகாமல் மண்ணுக்குள் சென்று நிலத்தடி நீர்மட்டமும் உயர்கிறது.
கோடை உழவில் ஆழமாக உழுவதால் கடினமான மேலோட்டமான மேல் அடுக்கு உடைந்து மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு மண்ணின் ஊடுருவல் திறன் மற்றும் ஊடுருவக்கூடிய தன்மை அதிகரிக்கிறது. இது மண்ணின் ஈரப்பதம் அதிகரித்து மண்ணின் நீர்ப்பிடிப்பு திறன் அதிகரிக்கிறது. கோடை உழவு மேற்கொள்வதால் மண்ணின் குளிர்ச்சியின் காரணமாக மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது.
கோடை உழவில் ஆழமாக உழுது மேல்மண்ணை கீழாகவும் கீழ்மண்ணை மேலாகவும் புரட்டி விடுவதால் மண்ணின் காற்றோட்டம் மேம்படுகிறது. மண்ணில் நுண்ணுயிரிகளின் பெருக்கம் அதிகரிக்கிறது. மண்ணில் கரிமப் பொருட்களின் கலவை துரிதப்படுத்துவதால் பயிர்களுக்கு அதிக ஊட்டச் சத்துகள் கிடைக்கிறது. மண்ணில் காற்றோட்டம் அதிகரிப்பதால் களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி எச்சம் மற்றும் முந்தைய பயிர்களின் வேர், களைகள் மூலம் வெளிப்படும் தீங்கான ரசாயனம் விரைவாக சிதைவடைகிறது.
மழைநீரை உறிஞ்சும் திறன் மண்ணில் அதிகரிப்பதால் வளி மண்டல நைட்ரஜன் நீரில் கலந்து மண்ணுக்குள் சென்று மண்வளத்தை அதிகரிக்கிறது. இதனால் பயிர் செழித்து வளர்ந்து மகசூல் அதிகரிக்கும். எனவே விவசாயிகள் தவறாமல் கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.