திருமலை: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நிறைவடையும் நிலையில், திருப்பதியில் நேற்று 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று காலை நிலவரப்படி வைகுண்டம் காம்பளக்சில் உள்ள 31 அறைகள் நிரம்பி சிலாதோரணம் வரை பக்தர்கள் சுமார் 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 18 மணி நேரத்துக்கு பிறகு சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.
ரூ.300 ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரமும், இலவச சர்வ தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் இலவச தரிசனத்தில் வந்த பக்தர்களுக்கு உணவு வழங்கவில்லையாம். இதனால் தேவஸ்தான அதிகாரிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த கூடுதல் செயல் அதிகாரி வெங்கைய்யா சவுத்திரி வரிசைகளை ஆய்வு செய்து பக்தர்களிடம் குறைகளை கேட்டு சாப்பாடு, மோர், பால் வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார். பின்னர் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார்.
* சர்ச்சை வீடியோ வெளியிட்டால் நடவடிக்கை
தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கைய்யா சவுத்திரி கூறுகையில்,’பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி, குழந்தைகளுக்கு, பால், மோர், காபி, சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் வேண்டுமென்றே தேவஸ்தானத்திற்கும், மாநில அரசுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய சம்பவங்களை வீடியோ எடுத்து சமூகவளைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு செயல்படுபவர்களை கண்காணித்து வருகிறோம். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.